Saturday, 26 July 2025

பசி தீர்ப்போம்

 சந்தை நாள் இன்று


மதிய சாப்பாடு, ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் சந்தை கூடிக் கொண்டு இருந்தது. மணியும், 2ஐ நெருங்கிக் கொண்டு இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் சந்தை, களை கட்டத் தொடங்கி விடும், 


ஒரு பெரியவர், தின்பண்ட கடை வைத்து இருந்தார். மிச்சர், முறுக்கு, சீவல், சேவு, பூந்தி என பலவிதமான ஐட்டங்கள். எதை எடுத்தாலும் இருபது ரூபாய் மட்டுமே. 


இனிப்பு பூந்தி மிகவும் பிடிக்கும் என்பதால், ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன், நல்ல பசி, சாப்பாடை ஒரு பிடித்து விட்டு அமர்ந்தேன். 


கண் முன்னே இருந்த பூந்தி பாக்கெட், என்னை இழுத்தது. வயிறு நிரம்பி  இருந்தாலும், பூந்தியின் மீதிருந்த ஆர்வத்தால் பாக்கெட்டைக் கிழித்து சாப்பிட ஆரம்பித்து விட்டேன். நாவில் பட்டதும் கரைய ஆரம்பித்தது. அடடா என்ன ஒரு சுவை? சில நேரங்களில் நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் தின்பண்டங்களை விட, சந்தையில் கிடைக்கும் பொருள்கள் விலை குறைவாக இருந்தாலும், தரமும் சுவையும் நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. 


அப்போது ஒரு பூந்தி, என் கை தவறி உருண்டு சென்று தரையில் விழுந்தது. எடுக்க எத்தனித்த நொடி, ஒரு எறும்பு அந்த பூந்தியை நெருங்கியது. சற்று பின் வாங்கி விட்டேன். அந்த எறும்பு, பூந்தியை ருசிக்க ஆரம்பித்து விட்டது. அப்படியே விட்டு விட்டேன், சாப்பிடட்டும் என்று. தூக்கி எறிய மனமில்லை. 


அப்பொழுது ஒரு விஷயம் தோன்றியது மனதில். எதையும் கொண்டு போகப் போவதில்லை. இருப்பதை அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து வாழ்வோம் பூமியில். 



ஒரு பூந்தி உருண்டைக்கு இவ்வளவு பில்டப்பா? என்று தோன்றலாம். அந்த எறும்புக்கு அது இரண்டு நாள் உணவு. 


கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில், நமக்கு எங்கிருந்தோ படியளக்கும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் அல்லது நமக்குக் கிடைத்திருக்கும் உணவை பிறருக்கும் பகிர்ந்தளித்து உண்போம்.


யாராவது உங்களிடத்தில் பசி என்று கையேந்தினால், சற்றும் யோசிக்காமல் அருகில் இருக்கும் ஓட்டலில் இருந்து ஒரு வேளை உணவை வாங்கிக் கொடுத்து விடுங்கள். 


நன்றி🙏💕🙏💕

No comments: